புதன், நவம்பர் 09, 2011

மனைவியின் மனதைக் கவர 10 வழிகள்!

பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்!'என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதோ உங்கள் மனைவியின் மனதைக் கவர 10 வழிகள்!
(11-வது ..டி..ப்...ஸா...ன ''வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம்'' படிக்கத்தவறாதீர்கள்)
டிப்ஸ் -1:
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல், அவள் பேசுவது ''உப்பு சப்பில்லாத டப்பா'' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.
நிறைவையும் ''உம்'' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", "ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.
உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கும் ஒரே ஊடகம் பேச்சுத்தான். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கின்றீர்கள் என்பதை அவளின் பேச்சுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே அவள் அறியமுடியும். எனவே நீங்கள் கொஞ்சம் செவிகொடுங்கள்!
டிப்ஸ் -2:
மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை வாங்கிக்கொடுங்கள். [உதாரணம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!
கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
டிப்ஸ் 3:
உண்மையில் வீட்டுப் பணிகளில் கணவனும் கூட இருந்து ஒத்துழைத்தால் உதவியாக இருக்கும் அல்லது நான் வீட்டு வேலை செய்துகொண்டிருக்கும் போது கணவன் குழந்தைகளைக் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் உதவியாக இருக்குமே! என்றமனைவியின் ஏக்கத்தைக் கணவன் புரிந்துகொள்ள வேண்டும்.
தனது உணர்வை இந்த மறமண்டை புரிந்து கொள்ளவில்லையே! என்று கோபம் கொந்தளிக்கும் போது அடுத்த கட்டமாக அவளிடமிருந்து வரும் பதில் பாரதூரமாக அமைந்து விடுகின்றது. வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.
டிப்ஸ் -4:
பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.
[செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!
டிப்ஸ் -5:
மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!
டிப்ஸ் -6:
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.
தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.
டிப்ஸ் -7:
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று, "எனக்கு கார்ட் [வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது, அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.
டிப்ஸ் 8:
பெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறிய முடியாதபடி, ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்துவிட முடிகிறது. ஆனால், ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். இதனால், குற்றம் சாட்டபடும்போது,பெண்களை விட ஆண்கள் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.
ஆகவே கணவன்மார்கள் மனைவிக்குத்தெரியாமல் செய்கிறேன் என்று ஏட்டிக்குப்போட்டியாக சில காரியங்களை செய்துவிட்டு மனையிடம் மாட்டிக்கொண்டால் திருதிருவெண்று முழிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கணவன் அப்பாவியாட்டம் திருதிருவென்று முழிப்பதை ரசிக்காத மனைவி நிச்சயமாக உலகில் எவரும் இருக்க மாட்டார்கள்..
டிப்ஸ் 9:
செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது. மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக்காது. பெண்களுக்கு வீட்டில்,வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படியாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக்கிய காரணம். ஆகவே கணவன்மார்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்
டிப்ஸ் 10:
ஆண்கள் சிலபோது பெண்களைச் சீண்டிப் பார்ப்பதற்காக சில வார்த்தைகளை அல்லது செய்திகளை அல்லது வர்ணனைகளைச் செய்யலாம். அதில் விளையாட்டுணர்வுதான் காரணமாக இருக்கும். ஆண்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் அதிகம் சென்டிமென்ட் (உணர்ச்சிபூர்வமாகப்)பார்ப்பார்கள்.
எனவே, வேடிக்கையாகப் பேசிய பேச்சுக்கள் அவர்களது நாவில் வேம்பாகவும், நெஞ்சில் வேலாகவும் பாய்ந்து வேதனையை உண்டுபண்ணலாம். எனவே விளையாட்டு விபரீதமாகி விடக்கூடாது என்பதில் கணவனும் கரிசனையாக இருக்க வேண்டும். இதையெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற விரிந்த மனதும் மனைவியிடம் இருந்தாக வேண்டும்.சீண்டுவதில் உண்மையான கோபம் இருக்கக்கூடாது.
சிலபோது மனைவி வேலை செய்து கொண்டிருப்பாள்; கணவன் ஓய்வாக இருப்பார் அல்லது பத்திரிகை வாசித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் மனைவி அலுத்துப் போய், "தனியாக இருந்து என்னால மாடு மாதிரி சாகமுடியாது!" என்ற தொணியில் தொணதொணப்பாள்.
சிலபோது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில விளையாட்டுக் கணவர்கள், "ஓ! வயசு போனால் அப்படித்தான்!" என்று ஏதாவது சொல்லும் போது மனைவிக்குப் பத்திக்கொண்டு வரும். அவளும், "நான் மட்டுந்தானே கிழவி? இவர் மட்டும் பெரிய பொடியண்டு நினைப்பாக்கும்!.." என்று தொடரலாம். இதை விளையாட்டாகவோ எடுத்துக் கொண்டால் வினையில்லை.

வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம்
பிழைக்கத்தெரிந்த ஒரு கணவரின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசித்தை அவரது நண்பர் பகிர்ந்து கொள்கிறார்..!
நானும் என் நண்பர் ஒருவரும் சுவராஸியமா பேசிட்டிருந்தோம். அப்போ அவரோட சந்தோஷமான திருமண வாழ்க்கை பத்தி பேச்சு வந்தது. நான் அவர்கிட்ட "உங்களோட வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன..?"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் ரொம்ப பெருமிதத்தோட "புருஷன் பொண்டாட்டி ஒவ்வொருத்தரும் அவங்கவங்க கடமையை புரிஞ்சி நடந்துக்கணும். மத்தவங்க உணர்வை மதிக்கணும்"னு சொன்னார்.
நான் தலையை சொறிஞ்சிக்கிட்டே "கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்"ன்னேன்.
அவர் சொல்ல ஆரம்பிச்சார். "உதாரணத்துக்கு எங்க வீட்டை பொறுத்தவரை பெரிய பெரிய விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன். சின்ன, சின்ன விஷயங்களில் முடிவு எடுக்கும் பொறுப்பை என் ஒஃய்ப் கிட்ட கொடுத்துடுவேன்"னார். அது மட்டுமல்ல, ஒருத்தர் எடுக்கிற முடிவில் இன்னொருத்தர் தலையிடுறதில்ல..அதனால் எங்களுக்குள் பிரச்சினையே வந்ததில்லை"ன்னாரு..!!
எனக்கு கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவா புரிஞ்சிக்க ஆசைப்பட்டேன்.அதனால் "முடிவு எடுக்கிற விஷயத்தை எப்படி டீல் பண்றீங்கன்னு கொஞ்சம் உதாரணத்தோட சொல்லுங்களேன்"னு கேட்டேன்.
"இன்னும் புரியலையா?!!"ன்னு என்னை கிண்டலா ஒரு பார்வை பார்த்துட்டு சொல்ல ஆரம்பிச்சார். "அதாவது, சின்ன சின்ன விஷயங்கள் உதாரணத்துக்கு என் ஒய்ஃப் நகை வாங்கணுமா வேண்டாமா..?
பட்டுப்புடவை வாங்கணுமா, வேண்டாமா..?
வீடு கட்டணுமா, வேண்டாமா?
எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வரணுமா, வேண்டாமா?
நான் இந்த வேலைல இருக்கணுமா, வேண்டாமா?-ன்னு
இப்படி சின்ன விஷயங்களில் என் ஒய்ஃபை முடிவு எடுக்க விட்டுடுவேன்...!!
எனக்கு ஷாக்காயிடிச்சி.!! இதெல்லாம் சின்ன விஷயமா..?
அவரை அதிர்ச்சியா பார்த்துக்கிட்டே... "சரி..அப்ப நீங்க எதைப்பத்தி தான் முடிவு எடுப்பீங்க..?!!"-ன்னு கேட்டேன்.
அவர் என்னை ஒரு மாதிரியா பார்த்துக்கிட்டே.. "நான் எடுக்கிற முடிவுகள் எல்லாம் இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் இருக்காது.
உதாரணத்துக்கு இப்ப அதிகமாகிக்கிட்டு வர்ற குளோபல் வார்மிங்கை குறைக்கிறது எப்படி?,
அமெரிக்கா இரான் மேல போர் தொடுக்கணுமா வேணாமா?,
பாக்கிஸ்தானை எப்படி கண்ட்ரோல் பண்றது?,
அடுத்த ஒலிம்பிக்ல இந்தியா எத்தனை பதக்கம் வாங்கணும்?-னு இப்படி பெரிய பெரிய விஷயங்களை பத்தி தான் நான் முடிவு எடுப்பேன்.
இதில் பெரிய ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா..? நான் எடுக்கும் எந்த முடிவிலும் என் ஒஃய் தலையிடுவதே இல்லை..
இப்ப புரியுதா எங்க சந்தோஷமான வாழ்க்கையின் சீக்ரெட்..?!!! "ன்னார்.!!
அய்யோ...எனக்கு தலையெல்லாம் சுத்துது.. யாராவது என்னை கைத்தாங்கலா பிடிச்சி உட்கார வச்சி கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்.. ப்ளீஸ்..!!

By MOHAMMED SIJI>>http://enayambahrain.blogspot.com

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...