புதன், டிசம்பர் 26, 2012

பணம் இருந்தால்.....


பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

.பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர்

. நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை! - கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை - ஆஸ்திரேலியாப் பழமொழி.
Aleem Bright face book

திங்கள், டிசம்பர் 24, 2012

ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?


மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி :

ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?

பதில்:

இஸ்லாமியர்கள் உட்பட – ஏராளமான பேர்கள் – ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்திருப்பது ஏன்?. என்கிற தர்க்க ரீதியான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.

இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் – சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கம் என்பதை நான் உங்களிடம் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். ஆணையும் – பெண்ணையும் சமமாகவே படைத்த அல்லாஹ் ஆணுக்கும் – பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் – இயல்புகளையும் கொடுத்தான். உடல் ரீதியாகவும் – உள ரீதியாகவும் ஆண்களும் – பெண்களும் வித்தியாசமானவர்கள். சமுதாயத்தில் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும் – பொறுப்புகளும் உள்ளன. இஸ்லாத்தின் பார்வையில் ஆண்களும் – பெண்களும் சமமானவர்களேத் (Equal) தவிர – ஒரே மாதிரியானவர்கள் (Identical) அல்ல.

அல்-குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 22வது வசனம் துவங்கி 24வது வசனம் வரை ஆண்கள் யார் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் – யார் யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை பட்டியலிடுகிறது. யார் யாரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பட்டியலில் ‘கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டள்ளது‘. (அல்-குர்ஆன் 4:24) எனக்கூறி ஆண்கள் திருமணம் ஆன பெண்களை மணமுடிப்பதை தடை செய்கிறது.

இஸ்லாம் – பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்வதை ஏன் தடை செய்கிறது – என்பதை கீழ்க்காணும் குறிப்புகள் இன்னும் விளக்கமாக நமக்கத் தெரிவிக்கின்றன.

1. ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்திருந்தால் – ஒவ்வொரு மனiவிக்கும் பிறக்கும் குழந்தைகள் இவருக்குத்தான் பிறந்தது என்பதை அடையாளம் காண்பது எளிது. இவர்தான் இந்தக் குழந்தையின் தந்தை என்று அடையாளம் காண்பதும் – இவர்தான் இந்த குழந்தையின் தாய் என அடையாளம் காண்பதும் மிக எளிது. அதே சமயத்தில் ஒரு பெண் பல கணவர்களை திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் – குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை – இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது இயலாத ஒன்று. குழந்தைகளின் தாயும் – தந்தையும் – இன்னார்தான் என்று அடையாளம் – கண்டு கொள்ளும் விஷயத்திற்கு இஸ்லாம் மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்குகிறது. தனது பெற்றோர் இன்னார்தான் என்று அறியாத குழந்தைகள் – குறிப்பாக தனது தந்தை இன்னார்தான் என அறியாத குழந்தைகள் – மனோநலம் குன்றியவர்களாக மாறுகிறார்கள் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்களது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை.

மேற்கூறப்பட்ட காரணங்களினால்தான் விலைமாதுகளுக்குப் பிறந்த குழந்தைகளின் – குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டு – அதனால் பிறந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது – ஒரே குழந்தைக்கு – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகப்பனாரின் – பெயர்களை சொல்லக்கூடிய நிலை உருவாகலாம். ஆனால் சமீபத்திய அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக – மரபணுச் சோதனை செய்து – ஒரு குழந்தையின் தாய் இன்னார்தான் என்றும் – ஒரு குழந்தையின் தந்தை இன்னர்தான் என்றும் அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதும் நான் அறிந்தவிஷயம். எனவே நான் எடுத்து வைத்த இந்த வாதம் கடந்த காலத்துக்குப் பொருந்துமேத் தவிர – இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது.

2. ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது – ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம்.

3. ஓரு ஆண் – பல பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளை செய்ய உடலியல் ரீதியாக ஆணுக்கு அந்த பணி மிக எளிதானதாகும். பல ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்ணால் – மனைவி என்ற முறையில் தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஓரு பெண் – மாதவிலக்காகும் கால கட்டங்களில் – மனோ ரீதியாகவும் – நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் – ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

4. பல கணவர்களை கொண்டிருக்கும் ஒரு பெண் – ஒரே கால கட்டத்தில் – பல ஆண்களுடன் உடல்உறவு கொள்வதால் – பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் – எந்தவித பாவமும் செய்யாத – மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்னை பல பெண்களை மணந்து கொள்ளும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை தடை செய்த அல்லாஹ்தான் மற்றுமுள்ள காரணங்களை அனைத்தையும் அறிந்தவன்.

எனவேதான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

புயல் காற்றோடு விமானம் தரை இரங்குதல்


ஞாயிறு, டிசம்பர் 23, 2012

முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)


இந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடையேயான பிரயானமொன்றின் போது விமானமொன்றில் இடம்பெற்றது.

விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிறம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.

அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மண்ணிப்புக் கேட்டவளாக, "முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்." என்று கூறி முடித்தாள்.

சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச்சிறிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.

சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து, சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள், விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமற நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மண்ணிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பிந்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப் பெண்ணை பாராட்டினர்.

அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும் தலைமை விமானியும் நிறுவனத்தின் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊளியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது.

"மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்."

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் படிப்பிணை பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!! :))

சனி, டிசம்பர் 22, 2012

விதவை




இதழ் இழந்த
மலராய் - மலர்
இழந்த மங்கை நான்.....

துக்கத்தை உணர்த்துவது
கறுப்பெனில் - வாழ்க்கையை
தொலைத்ததன் அடையாளம்
வெள்ளையா.....

தேடினேன் விடியலை
இருளில் - ஏற்ற விரும்பிய
விளக்கை அணைத்து அணைக்கவே
ஆர்வம் கொண்டனர் அனைவரும்.....

வேண்டாத ஆறுதலை,
ஆதரவை தருவதாய் - வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சினர்
வீட்டினர் கூட.....

மேகம்போல் வந்து
மேகமாய் மறைந்த மணாளன்
மின்னலாய் வந்து உயிர்
எடுத்தவன் எமன்.....
வானவில்லின் ஆயுளைப்போல்
வாழ்க்கையின் வசந்தங்கள்
மழை நின்ற வானமாய்
என் வாழ்க்கை.....
Aysha

செவ்வாய், டிசம்பர் 18, 2012

குழந்தை பாக்கியம் அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்ராஹீம்(அலை) அவர்கள் நீண்ட காலம் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் முதிர்ந்த வயது வரை அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது அதுவரை அவர்கள் குழந்தை இல்லாததுப் பற்றி எவ்வித வருத்தமும் பட வில்லை அல்லாஹ் நாடியப் பிரகாரம் நாடியவருக்கு குழந்தைகளை கொடுப்பான் நம்முடைய விஷயத்தில் அல்லாஹ்வுடைய நாட்டம் எப்படி இருக்கிறதோ அவ்வாறே நடக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.

42:49. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.

42:50. அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திருமணமும் செய்திருந்தார்கள் ஆனால் இளமைப் பருவத்தில் தூக்கி கொஞ்சுவதற்கு குழந்தை இல்லை இவ்வளவுக்கும் குழந்தை பாக்கியத்தை கை வசத்தில் வைத்துள்ள அல்லாஹ்வின் உற்ற தோழராகவும் இருந்தார்கள், இறந்தோர் எவ்வாறு உயிர்ப்பிக்கப் படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக அல்லாஹ்விடம் கூறி அல்லாஹ்வும் அவர்களுக்கு அதை செய்து காட்டி அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு விருப்பமான நேசராகத் திகழ்ந்தார்கள்.

2:260. ''என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டிய போது, ''நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் ''அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.'' என்றார். ''நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.

அதே நேரத்தில் குழந்தைப் பாக்கியத்தை மிகவும் தாமதப்படுத்தினான். அதற்காக அல்லாஹ்வுடைய பணி செய்வதிலிருந்து அவர்கள் சோர்வடைந்தது கிடையாது. அல்லாஹ்விடமிருந்து வந்தோம் மீண்டும் அல்லாஹ்விடமே திரும்பச் செல்ல இருக்கிறோம் இடைப்பட்ட உலக வாழ்வில் அவன் விரும்பி நமக்கு தந்தது நம்மைச் சேர்ந்தது தராமல் விட்டது நமக்குரியதல்ல.

நம்மைச் சேராத ஒன்றுக்காக வருத்தப் படத் தேவை இல்லை அதற்காக அவனை வணங்குவதிலிருந்தோ, அவனது மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலிருந்தோ பின் வாங்கவும் தேவை இல்லை என்பதில் மிக உறுதியாக இருந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்கள்.

அல்லாஹ்வை உறுதியாக நம்புவோருக்கு, அவனுடைய மார்க்கப் பணியை எடுத்துச் சொல்லும் அரும் பணியில் ஈடுபடுவோருக்கு அவர்களுடைய வாழ்வில் சில குறைகள் இருந்தால் அதை அலச்சியம் செய்து விட்டு உற்சாகமாக இயங்குவதற்கு இப்ராஹீம்(அலை) அவர்களுடைய தொய்வில்லா தஃவா பணி சிறந்த எடுத்துக் காட்டாகும்.

ஈமானின் பிறப்பிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் போது முதிர்ந்த வயதை உடையவர்களாக இருந்தார்கள்.

அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளப்பட்ட செய்தியை மலக்குகள் மூலம் கேட்டதும் எனக்கா ? இத்தனை வயதிலா ? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவுக்கு வயதாகி இருந்தது.

இவ்வாறு கேட்டதும் அல்லாஹ்வுடைய ஆற்றலில் நம்பிக்கை இழந்து விட்டீரா என்று மலக்குகள் கேட்க ? நானா, எனதிறைவனின் ஆற்றலின் மீதா நம்பிக்கை இழந்து விட்டேன் ? வழிகெட்டவர்களின் வரிசையில் உள்ளவன் நானல்ல, எனது இறைவனின் அருளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டவன் நான் என்று பதிலளித்தார்கள்.

15:53. ''நீர் பயப்படாதீர் ! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

15:54. ''எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.

15:55. ''உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!'' என்று அவர்கள் கூறினர்.

15:56. ''வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?'' என்று அவர் கேட்டார்.

வெறும் வயிறுடன் திரும்பியவர்களே ஏராளம்.
இன்று பார்க்கின்றோம் திருமணம், முடிந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட சில நாட்களிலேயே ரிசல்ட் பக்காவாக இருக்க வேண்டும் என்று ஆவல் கொள்கின்றனர் ரிசல்ட் எதிராக அமைந்து விட்டால் அல்லது தள்ளிக் கோண்டேப் போனால் சோர்வடைந்து விடுகின்றனர் மருத்துவர் கூட அடுத்த கட்டம் முதல் கட்டமாக அவுலியாக்களிடம் செல்கின்றனர்.

வயதாகிக் கொண்டேப் போகிறது என்னை மாதிரியே குழந்தை இல்லாமல் இருந்த இன்னாருக்கு இன்ன அவுலியாவிடம் போனதும் குழந்தை உண்டாகி விட்டது அதனால் நானும் தர்ஹாவுக்கு போனேன் என்றக் காரணமும் சொல்வர்.

இன்னாருக்கு கிடைத்தது போன்று தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தர்ஹாவுக்குப் போய் வெறும் வயிறுடன் திரும்பியவர்களே ஏராளமானோர்

இவ்வாறு வெறும் வயிறுடன் திரும்புவதே அவுலியாக்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும் வல்ல அல்லாஹ்வே ஆற்றலுடையோன் என்பதையும் பறைசற்றுவதாக அமையப் பெற்றுள்ளதை மக்கள் உணரத் தவறுகின்றர்.

அல்லாஹ் யாருக்கு எப்பொழுது எதை நாடுகிறானோ அப்பொழுது அவ்வாறே நிறைவேற்றுவான் என்ற ஆழமான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் அல்லாஹ் மலக்குகள் மூலம் அறிவித்தபடி குழந்தையை கொடுப்பான் என்ற நம்பிக்கை உருவானது.

நல்லொழுக்கமுள்ள குழந்தை தான் சிறந்த வாரிசு.
தனக்கு பிறக்க இருக்கின்ற குழந்தையை நல்லொழுக்கமுள்ளக் குழந்தையாக தந்தருள் புரியவாயாக அல்லாஹ் ? என்ற துஆவை இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

37:100. என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

37:101. அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.

இன்று நம்மில் பலர் குழந்தை தங்கி விட்டது என்பதை அறிந்ததும் வானத்திற்கும், பூமிக்குமாக குதிப்பவர்கள் பிறக்க இருக்கின்ற குழந்தை நல்லொழுக்கமுள்ள குழந்தையாக பிறக்க வேண்டும் என்று குழந்தை பாக்கியத்தைக் கொடுத்த கொடையாளனிடம் கேட்க மறந்து விடுகின்றனர்.

சுகப் பிரசவமாக பிறக்க வேண்டும் என்று மனைவி நலம் கருதி கேட்பவர்கள், ஆண் குழந்தையாக வேண்டும், அல்லது பெண் குழந்தையாக வேண்டும் என்று பாலினத்தில் கவனம் செலுத்துபவர்கள் ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவதில்லை.

விதையை விதைத்ததும் அவ்விதையின் பயிர் எவ்வாறு வளர்ந்து தழைத்தோங்க வேண்டும் என்பதில் இரவு பகலாக கவனம் செலுத்துபவன் விவசாயி, கவனம் செலுத்த மறந்தால் விரும்பியவாறு பயிர் வளராது. வேர் விடாமல் கூட கருகி விடலாம்.

குழந்தை கருவில் தங்கி விட்டால் அக்குழந்தை குண நலம் மிக்க குழந்தையாக தந்தருள் புரிவாயாக இறைவா ! என்ற துஆவை கேட்க வேண்டும். இது இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் பெறும் படிப்பினை.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட மாதிரியே இஸ்மாயில் (அலை) அவர்களை குணத்தின் குன்றாக, பொருமையின் பொக்கிஷமாக அருளினான் அளவற்ற அருளாலன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.

Dr.Abdullah-இஸ்லாத்தை நோக்கிய எனது பயணம்


ஞாயிறு, டிசம்பர் 16, 2012

நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன்


என் பெயர் இஹ்ஸான் சுவா கிம்சாம் வயது 23 நான் பிறப்பால் தாவ்யிஸம் (சீன மதம்) (Taoஃism philosophy & religion of China in the 6th century B.C.) நான் ஒன்பது வயதாக இருக்கும்போது கிறிஸ்தவ மதத்தை தழுவினேன். சிறிது காலம் சென்று புத்தமதத்தை படித்தேன். எனக்கு ஒன்பதாவது வயதில் எனது ஆசிரியர், நீங்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தை தழுவ வேண்டும் இல்லையேல் மரணத்திற்குப் பின் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்று சொன்னார். அந்த பயத்தின் காரணத்தால் நான் கிறிஸ்த்தவ மதத்தையும் நம்பினேன், எனது பெற்றோர்களுக்காக சீன மதத்தையும் நம்பினேன்.
நான் உயர் நிலை 3, 4 படிக்கும்போது ஏதாவது ஒரு மதத்தை எடுத்து படிப்பது கட்டாயமானதால் பாடங்களும் சுலபமானதால் நான் புத்தமதத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தேன். அதில் சொல்லப்பட்ட மனித நேயம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அங்கு இறைவன் இல்லை. பிறகு நான் ஜூனியர் காலேஜ் சேர்ந்தேன். அது ஒரு கிறிஸ்தவ மிசினரி ஸ்கூல். அங்கே எல்லா மாணவர்களும் (முஸ்லிம் மாணவர்களைத் தவிர) வாரத்தில் ஒரு நாள் தேவாலயத்துக்கு கண்டிப்பாக செல்லவேண்டும். அங்கு நாங்கள் உபதேசங்களையும், மத பாடல்களையும் பாடுவோம். இவ்வேளையில் அங்கு ஒரு பாதிரியாரின் உபதேசம் என்னை கவர்ந்தது. அவர் பழைய ஏற்பாட்டில் உள்ள பைபிளிலும் புதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளிலும் உள்ள தொடர்புகளை விளக்குவார். அப்போது எனக்கு வயது பதினேழு. இருந்த போதிலும் அந்தப் போதனையால் நான் அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.
நான் பல பிரிவுகளை உடைய சர்ச்சுகளுக்கு மாறி மாறி வந்தேன். பிறகு ஒரு நன்பர் அவரது சர்ச்சுக்கு (St.John St.Margaret) அழைத்துச் சென்றார். இந்தக் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. சர்ச்சுடைய நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டேன். அங்கு பயிலும் சிறார்களுக்கு மறைமுகமாக கிறிஸ்தவ கொள்கைகளை கதை வடிவத்தில் கூறுவோம். உதாரணமாக வகுப்பு ஆரம்பிக்கும் முன் பிரார்த்தனையும், பைபிள் சம்பந்தப்பட்ட சிறு கதைகளையும் சொல்லி விட்டுத்தான் வகுப்புகளை ஆரம்பிப்போம். மேலும் எங்கள் சர்ச்சில் கால்பந்து, கூடைப்பந்து, மேசைப்பந்து இன்னும் பலவித விளையாட்டுகளை ஏற்பாடுகள் செய்து சுற்று வட்டாரத்தில் உள்ள இளைஞர்களையும், மற்றவர்களையும் அழைத்து நடத்துவோம். அவர்களை பைபிள் வகுப்புக்கும் அழைப்போம். சர்ச்சுகள் விளையாட்டை மதப் பிரச்சாரத்திற்கு பாவிப்பது உலகலவில் புதிது அல்ல என்றாலும் சிங்கப்பூரில் இவ்வகைப் மதப்பிரச்சாரம் அறிமுகம் செய்தது நான் சார்ந்த சர்ச்சுதான்.
இந்நிலையில் நான் அறிந்த ஒரு முஸ்லிம் பெண்மனியை அனுகி அவளிடம் கிறிஸ்த்தவத்தை பற்றி எடுத்துரைத்தேன். ஆனால் அவளோ தன்னுடைய மார்க்கம் உண்மையானதும் என்றும் உறுதியானதும் என்றும் ஆனால் தனக்கு அதுபற்றி எப்படி விளக்கம் அளிப்பது என்று தெரியவில்லையென்றும் கூறினாள். இதற்கு மேலும் நான் கிறிஸ்த்தவ மதத்தை எடுத்து கூற வழியில்லாமல் போய்விட்டது. இந்தச் சம்பவம் என்னை சிந்திக்கத் தூண்டியது.
முஸ்லிம்களில் பலர் மது அருந்துகிறார்கள், போதைக்கு அடிமையாகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மதங்களை கைவிடுவதில்லை ஏன்? என்று எனக்கு தெரிந்த நன்பரிடம் கேட்டேன். அவருக்கும் விளக்கம் அளிக்க முடியாமல் என்னை தாருல் அர்க்கம் (Darul Arqam Muslim Converts Association of Singapore) சென்று விளக்கம் கேட்கச் சொன்னார். சரி என்று அங்கு போய் கேட்க முடிவெடுத்தேன். இஸ்லாத்தின் மீது உள்ள நம்பிக்கையினால் அல்ல. என்னை பொறுத்த வரை இஸ்லாமிய மதம் ஒரு தீவிரவாத மதம். அதில் ஒரு உண்மையும் இருக்காது என்று தான் நினைத்திருந்தேன். காரணம் இஸ்லாம் ஓர் நல்ல மதமாக இருந்திருந்தால் முஸ்லிம்களும் நல்லவர்களாக இருப்பார்களே என்றே எண்ணினேன்.
எனக்கு தெரிந்த முஸ்லிம்கள் யாரும் எனக்கு நல்லவராக தெரியவில்லை. ஆனால் ஒருவரைத் தவிர. அவர் என்னோடு ஜூனியர் காலேஜில் படித்துகொண்டிருந்தார். ஆனால் அவர் இஸ்லாத்தை என்னிடம் எடுத்து வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மேலும் நான் இஸ்லாத்தை விரும்பாததற்கு என் குடும்பமும், மத்திய கிழக்கில் நடக்கும் சம்பவங்களும் காரணமாகும்.
நான் தாருல் அர்க்கம் சென்று சகோதரர் ரெமி அவ்ர்கள் நடத்தும் வகுப்பில் முதன் முதலில் கலந்துக்கொண்டேன். அவர் சொன்ன இரண்டு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒன்று இஸ்லாம் கிறிஸ்தவத்தை போன்று உணர்வுப்பூர்வமானது அல்ல. இரண்டாவது இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்றால் உங்கள் சந்தேகம் தீரும் வரை பொருத்திருங்கள். இஸ்லாத்தைப் பற்றி வேறு கேள்வி இல்லையென்ற பிறகு நீங்கள் இஸ்லாத்தை தழுவிக் கொள்ளலாம் என்று சொன்னார். ஆனால் கிறிஸ்த்தவத்தில் அப்படி இல்லை. கேள்வி மேல் கேள்வி கேட்க குழப்பம்தான் மிஞ்சும்.
மறு சில வாரங்களில் நான் தாருல் அர்க்கம் சென்று “Pllar of Islam” என்ற வகுப்பில் இடையில் கலந்து கொண்டதால் ஆர்வமில்லாமையால் ஓரிரு வகுப்பு மட்டும் சென்று நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு அஹமத் டீடாட் எழுதிய (Ahmad Deedat) எழுதிய “The Choice”, “Islam and Christianity” கேரி மில்லர் எழுதிய “The Basis of Muslim Belief” புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பிறகு நான் மீண்டும் ரெமியை சந்தித்தபோது அவர் உஸ்தாத் ஜுல்கிப்லீயை எனக்கு அறிமுகம் செய்தார். பிறகு நானும் அவரும் பல வாரங்கள் இஸ்லாத்தைப் பற்றி கலந்துரையாடினோம்.
அவர் கிறிஸ்த்தவத்தைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பியபோது நான் சரியான பதில் கூற முடியாத காரணத்தால் அதே கேள்விகளை எங்கள் சர்ச்சிடமும், சிங்கப்பூர் பைபிள் காலேஜிடமும் கேட்பேன். அவர்களின் பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை. அதே வேளையில் அவர்களின் பதிலை நான் ஏற்றுக்கொண்டால் இறைவனை நான் அவமதிப்பதாகிவிடும். அதாவது பைபிளில் (Trinity) எனப்படும் (மாதா, பிதா, பரிசுத்தஆவி) என்ற கோட்பாடு இயேசுவுக்கு பிறகு 325AD அறிமுகமானது.
பைபிளில் எனக்கேற்படும் சந்தேகங்களை குறித்து எங்கள் சர்ச்சுகளில் கேட்டால் சிறு பிழைகள் என்றும் அச்சுப் பிழைகள் என்றும் சொல்லி விடுகிறார்கள். மேலும் கிறிஸ்த்துவத்தைப் பற்றி தாருல் அர்க்கம்மில் கிடைத்த தகவல்கள் மூலம் நான் திருப்தியடயவில்லை. அவைகள் எல்லாம் சரியானதா என பல நூல்களை (Encyclopedia) பார்வையிட்டதில் அவைகள் யாவும் உண்மை என தெரிய வந்தது. மேலும் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு பைபிளில் இருப்பதையும் அறிந்தேன். இனிமேலும் நான் ஒரு கிறிஸ்த்தவனாக இருப்பதில் எந்தக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
பிறகு ஒரு நாள் தாருல் அர்க்கமில் உஸ்தாத் ஜுல்கிப்லீ அவர்கள் என்னை எப்பொழுது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்? என்று கேட்டார். நான் சொல்வதற்கு வார்த்தையின்றி மெளனமானேன். நான் மீண்டும் மீண்டும் சிந்தித்ததில் இனிமேலும் தூய இஸ்லாத்தை தழுவாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று முடிவுக்கு வந்து உண்மை மார்க்கத்தை தழுவினேன்.
ஆரம்பத்தில் என் குடும்பத்தார் நான் இஸ்லாத்தை தழுவியதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. நான் எப்பொழுதும் போலவே பன்றிக்கறி சாப்பிடுவேன் என்றும் மற்றவர்களைப் போலவே இருப்பேன் என்றும் நினைத்துக் கொண்டார்கள். நான் இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பிததும் வீட்டில் பிரச்னை ஆரம்பமானது. அடுத்து நான் தொழுவதையும், ரமழான் மாதம் நோன்பு வைப்பதையும் கண்டவுடன் மேலும் பிரச்னையாகி அதிகமாகியது. இப்படியே பல மாதங்கள் கடந்தன. ஹலால் உணவை கிட்டாது என்பதால் வீட்டில் உண்ணுவதையும் நிறுத்திக்கொண்டேன்.
என் குடும்பத்தின் மீது எனக்கு எந்தப் பாசமும் இல்லையென்று குறை கூறினார்கள். எங்களுக்கிடையில் எப்பொழுதும் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. நான் எவ்வளவோ இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்து கூறியும், அவர்கள் புரிந்துக்கொள்ளத் தயாரில்லை. நான் வெளியே சென்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப பயந்தேன். ஒரு நாள் எனது தாயார் என்னை அனுகி வீட்டுக்கு தாமதமாக வரவேண்டாமென்றும் என்னைப் பற்றி எனது தந்தை கவலைபடுவதாக கூறினார். எனக்கு தனியாக ஹலால் உணவு சமைத்து தருவதாகவும் கூறினார். இப்பொழுது தன் முஸ்லிம் மகனின் வசதிக்காக எல்லோருமே பெரும்பாலான நேரத்தில் என்னுடன் சேர்ந்து ஹலால் உணவு சாப்பிடுகிறார்கள். முன்பைவிட இப்பொழுது குடும்பத்தின் நிலைமை சுமூகமாய் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

புதன், டிசம்பர் 12, 2012

பெண்கள் எதிர்பார்க்கும் வரதட்சணை


பெண்ணே உங்கள் வருங்கால கணவர் :
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இரு
க்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கேட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?

மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.


இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை



சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt) ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந் நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

வியாழன், டிசம்பர் 06, 2012

எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து!


அன்று சொன்னது சம்பத்து எங்கள் சொத்து
இன்று சொல்லாதது சம்பத்து எங்கள் சொத்து
எப்போதும் ஓரிடத்தில் தங்காதது சொத்து
சுழலும் உலகத்தில் சொத்தும் சுழலும்
சுழலும் ஆட்சியில் சொத்தும் நழுவும்
சொத்து தேடியும் வரும் தேடாமலும் கிடைக்கும்
சொத்து தேடி வந்தால் மகிமை
சொத்து தேடாமல் வந்தால் நியதி
சொத்து நம் செயலால் அடுத்தவர் கையில்
சொத்து எங்கிருந்தாலும் மதிப்புதான்
சொத்தை சேர்க்க படும்பாடு பெரும்பாடுதான்
சொத்தை விட்டதால் படும்பாடு பெரும்பாடுதான்
சொத்தின் மகிமை சொத்து இருக்கும் போது தெரியாது
சொத்தின் மகிமை சொத்தை இழந்த பின் தெரியும்
தன்னிடம் நிற்காத சொத்தின் மீது நாட்டம்
தன்னிடம் நிற்கும் சொத்து அறச் செயலே
வளர்த்த கடா நெஞ்சில் பாயும்
வளர்த்த மனிதன் நெஞ்சை விட்டு அகல்வார்
சம்பந்தம் பேச சொத்தின் விவரம் கேட்பார்
பந்தம் முறிய சொத்தை பிடுங்குவார்
சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம்
இருக்கும் சொத்தை தாரம் செய்வோம்

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.-(குர்ஆன்:4:7)

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.(குர்ஆன்:4:10.)

இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங
்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவான்

பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது
உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:
1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட
பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும்
ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற
பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. இதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் -
அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில
இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும்
பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது -
இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட
பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல
அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன்
எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின்
பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும்
மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது
அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் ''விஷா'

ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக ''விஷா' அதாவது
அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில்,
தமக்கென வித்தியாசமான சட்டங்களையும், விதிகளையும், தேவைகளையும் வகுத்துள்ளன.
மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும், தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு
தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில் கடுமையான சட்டங்களையும், விதிகளையும்,
தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில்
உள்ள மக்களுக்கு அனுமதி அளிப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வகுத்துள்ளது.
மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான
தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது, போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண
தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல
வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை
காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு
உட்படுவேன் என்றால் மாத்திரமே, என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த
மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால்
மொழிந்து, உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய

''லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்'
'வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
முஹம்மது நபி அவனது தூதராவார்' - என்பதுதான்.

திங்கள், டிசம்பர் 03, 2012

குட்டிக்கதை


ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்..

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரையும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..

''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்..

''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்..

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி..

அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்..

''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே...''என்றான் கணவன்..

''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி..

''பிராமாதம்..'' என்றான் கணவன்..

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..

''நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்..'' அந்த விருந்தாளிதான்..

கதையின் நீதி...நடிப்பு என்றுமே உதவாது...

சனி, டிசம்பர் 01, 2012

சொத்துக்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் ?


இன்றைய காலங்களில் சாதாரண மக்களான நாம் சொத்துக்கள் வாங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே நாம் வாங்கினாலும் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது மிக அபூர்வமே. எனவே நாம் எந்த ஒரு சொத்துக்கள் வாங்க முடிவெடுத்தாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகே வாங்கவேண்டும். இல்லையெனில் பின் நாட்களில் பல இன்னல்களில் சிக்கி தவிக்க வேண்டியிருக்கும் .எனவே நாம் சொத்துக்கள் வாங்கும் போது முன்எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வரும் முன் காப்பது நன்று என்பது போல், முன்கூட்டியே சொத்துக்கள் வாங்கும் போது எந்த நிலையில் தவறுகள் வரலாம் என்பதை தெரிந்துகொள்வது நன்று.அதற்கான சிலவழிகள்



01. சொத்துக்களை விற்பவர் சட்டப்படி அதற்கு முழு உரிமையாளர என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

02.விற்பவர் சட்டப்படி அந்த சொத்தின் முழுமையான் உரிமை பெற்றவராக இல்லாமல் இருக்கலாம். எனவே முதலில் அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

03.பத்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் சொத்திற்கும் ,நமக்கு காண்பிக்க படும் இடத்திற்கும் சரியான படி பத்திரத்தில் தகவல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.சம்பந்தமே இல்லாமலும் இருக்கலாம் கவனமாக இருக்கவேண்டும்.

04. நமக்கு விற்கப்படும் சொத்துக்கள் வேறு யாருக்காவது விற்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

05.விற்கப்படும் சொத்தில் ஒரு பகுதி அல்லது பாதியளவு வேறு யாருக்காவது விற்கப்பட்டிருக்கலாம் . அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

06. சொத்தினை விற்பவர் தமக்கு சம்பந்தமில்லாத வேறு இடங்களையும் இத்துடன் இணைத்து விற்கலாம் அதனை கவனிக்க வேண்டும்.

07. சொத்துக்கள் மைனர் பெயரில் இருக்கலாம் அதனை மறைத்து விற்க முற்படலாம் .எனவே விற்பவரின் முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

08. விற்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.வில்லங்க சான்று பெற்று அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

09. இவை நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட இடமாக இருக்கலாம் அதனை தெரிந்துகொள்ளவேண்டும்.

10. சரியான சட்டபடியான அணுகு பாதை அல்லது ரோடு வசதி உள்ளதா என்பதை அறிய வேண்டும். விற்கும் சொத்தின் பாதையினை பற்றி தவறான தகவல் இருக்கலாம்.

11. மூலப் பத்திரங்கள் தொடர்பு பற்றிய தெளிவில்லாமலோ, விற்கமுடியாத வகையிலான சொத்தாகவோ இருந்தால் அதனை பயன்படுத்தி வங்கி கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.

12. பழையக் கட்டடங்களை பொறுத்தவரை முறையான அனுமதி பெறாமல் இருப்பின் கூடுதலான் அல்லது அதிகப்படியான கட்டடங்கள் கட்ட அனுதி பெரும் போது பிரச்சனைகள் வரக்கூடும்.

13. சொத்தினை நாம் வாங்கிய பின் அதனை மற்றவர்களுக்கு விற்பதில் பிரச்சனை வரலாம் அல்லது ஏற்படுத்தப்படலாம்.

14. நேரில்கானும் போது சொத்துக்களின் பரப்பளவில் குறையிருக்கலாம் அல்லது பத்திரத்தில் உள்ளவாறு இல்லாமல் இருக்கலாம் .அளவினை கணக்கிடுவதில் தவறு செய்யப்பட்டிருக்கலாம்.

15. சொத்தின் மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படியில்லாமல் இருக்கலாம் அல்லது சொல்லக்கூடிய மதிப்புக்கு தகுதியில்லாமல் இருக்கலாம்.

16. விற்பவர் பொது நடைபாதைகளையும் சேர்த்து விற்க முயற்சிசெய்யலாம் எனவே சட்டபடியான பொது நடைபாதை உள்ளதை உறுதிசெய்யவேண்டும் .

17. பத்திரம் மதிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளில் திசைகளை மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

18. சுற்றுப்புற காலி மனை , சுற்றுப்புறச் சுவர்கள் அல்லது சுவர்களின் உண்மையான உரிமை குறிப்பிடாமல் இருக்கலாம்

19. நடைப்பாதைகள் இருப்பின் அதன் உரிமைநிலை தரைத்தளத்தில் எப்படி என்றும் முதல் தளத்தில் எப்படி என்பதை பற்றிய உறுதியான தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

20. கிரையம் முடிந்த பின் கட்டடத்தில் உள்ள மின் சாதனங்கள், விளக்குகள், மோட்டார் சாதனங்கள் போன்றவைகள் அப்புறப் படுத்தப்பட்டிருக்கலாம் பத்திரத்தில் அதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டிருகின்றதா என சரிப்பார்க்க வேண்டும்.

21.மின் இணைப்புக்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை அறிந்த்துக் கொள்ளவேண்டும் மற்றும் அதனை பற்றிய தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

22. கட்டடமாக இருப்பின் சரியான காலத்தில் வீட்டு வரி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வரி போன்றவை சரியான காலத்தில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டியது.

01 அங்கீகாரம் பெற்ற வரைப்படம் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் குடியிருப்பு கட்டும் இடத்தில் பொதுவான பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள்.

02. கட்டிடம் அங்கீகாரம் பெற்ற வரைப்படத்தின் படி தான் கட்டப்பட்டுள்ளதா என அறிந்துக்கொள்ளுங்கள் .

03. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு, பிரிக்கப்படாத மனை பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்

04. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர் , பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்கு குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதினை சோதித்து உறுதிச் செய்யவேண்டும்.

05. முழுமையான கட்டுமான பனி முடிந்த பின்னர்,சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால், அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டிடம் வரிப்படத்தின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

06. அடுக்கு மாடி வீடு வாங்குவதில் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சி.எம்.டி ஏ., வின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினை தொடர்புக் கொள்ளவும்.

மேலும் எந்த விதமான சட்டச் சிக்கலுக்கும் விரிவான விளக்கமளிக்க பல இணையத்தளம் உள்ளன . கீழ் காணும் இணைப்பில் சென்று நமக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெறமுடியும்.


தமிழ்நாடு சட்ட ஆலோசகர்கள்


இதில் உங்களின் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் சட்டரீதியான பதில்கள் இலவசமாக அளிக்கின்றனர் . மேலும் அனைத்து சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டவல்லுநர்கள் மூலம் சட்டஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குகின்றது.

நாம் வாங்கும் சொத்தினை எந்த விதமான வில்லங்கமும் இல்லமால் அடைய மேற்சொன்ன வழிகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...