சனி, டிசம்பர் 01, 2012

சொத்துக்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் ?


இன்றைய காலங்களில் சாதாரண மக்களான நாம் சொத்துக்கள் வாங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே நாம் வாங்கினாலும் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது மிக அபூர்வமே. எனவே நாம் எந்த ஒரு சொத்துக்கள் வாங்க முடிவெடுத்தாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகே வாங்கவேண்டும். இல்லையெனில் பின் நாட்களில் பல இன்னல்களில் சிக்கி தவிக்க வேண்டியிருக்கும் .எனவே நாம் சொத்துக்கள் வாங்கும் போது முன்எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வரும் முன் காப்பது நன்று என்பது போல், முன்கூட்டியே சொத்துக்கள் வாங்கும் போது எந்த நிலையில் தவறுகள் வரலாம் என்பதை தெரிந்துகொள்வது நன்று.அதற்கான சிலவழிகள்



01. சொத்துக்களை விற்பவர் சட்டப்படி அதற்கு முழு உரிமையாளர என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

02.விற்பவர் சட்டப்படி அந்த சொத்தின் முழுமையான் உரிமை பெற்றவராக இல்லாமல் இருக்கலாம். எனவே முதலில் அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

03.பத்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் சொத்திற்கும் ,நமக்கு காண்பிக்க படும் இடத்திற்கும் சரியான படி பத்திரத்தில் தகவல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.சம்பந்தமே இல்லாமலும் இருக்கலாம் கவனமாக இருக்கவேண்டும்.

04. நமக்கு விற்கப்படும் சொத்துக்கள் வேறு யாருக்காவது விற்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

05.விற்கப்படும் சொத்தில் ஒரு பகுதி அல்லது பாதியளவு வேறு யாருக்காவது விற்கப்பட்டிருக்கலாம் . அதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

06. சொத்தினை விற்பவர் தமக்கு சம்பந்தமில்லாத வேறு இடங்களையும் இத்துடன் இணைத்து விற்கலாம் அதனை கவனிக்க வேண்டும்.

07. சொத்துக்கள் மைனர் பெயரில் இருக்கலாம் அதனை மறைத்து விற்க முற்படலாம் .எனவே விற்பவரின் முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

08. விற்கும் சொத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.வில்லங்க சான்று பெற்று அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

09. இவை நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட இடமாக இருக்கலாம் அதனை தெரிந்துகொள்ளவேண்டும்.

10. சரியான சட்டபடியான அணுகு பாதை அல்லது ரோடு வசதி உள்ளதா என்பதை அறிய வேண்டும். விற்கும் சொத்தின் பாதையினை பற்றி தவறான தகவல் இருக்கலாம்.

11. மூலப் பத்திரங்கள் தொடர்பு பற்றிய தெளிவில்லாமலோ, விற்கமுடியாத வகையிலான சொத்தாகவோ இருந்தால் அதனை பயன்படுத்தி வங்கி கடன் பெறமுடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.

12. பழையக் கட்டடங்களை பொறுத்தவரை முறையான அனுமதி பெறாமல் இருப்பின் கூடுதலான் அல்லது அதிகப்படியான கட்டடங்கள் கட்ட அனுதி பெரும் போது பிரச்சனைகள் வரக்கூடும்.

13. சொத்தினை நாம் வாங்கிய பின் அதனை மற்றவர்களுக்கு விற்பதில் பிரச்சனை வரலாம் அல்லது ஏற்படுத்தப்படலாம்.

14. நேரில்கானும் போது சொத்துக்களின் பரப்பளவில் குறையிருக்கலாம் அல்லது பத்திரத்தில் உள்ளவாறு இல்லாமல் இருக்கலாம் .அளவினை கணக்கிடுவதில் தவறு செய்யப்பட்டிருக்கலாம்.

15. சொத்தின் மதிப்பு தற்போதைய சந்தை நிலவரப்படியில்லாமல் இருக்கலாம் அல்லது சொல்லக்கூடிய மதிப்புக்கு தகுதியில்லாமல் இருக்கலாம்.

16. விற்பவர் பொது நடைபாதைகளையும் சேர்த்து விற்க முயற்சிசெய்யலாம் எனவே சட்டபடியான பொது நடைபாதை உள்ளதை உறுதிசெய்யவேண்டும் .

17. பத்திரம் மதிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளில் திசைகளை மாற்றி குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

18. சுற்றுப்புற காலி மனை , சுற்றுப்புறச் சுவர்கள் அல்லது சுவர்களின் உண்மையான உரிமை குறிப்பிடாமல் இருக்கலாம்

19. நடைப்பாதைகள் இருப்பின் அதன் உரிமைநிலை தரைத்தளத்தில் எப்படி என்றும் முதல் தளத்தில் எப்படி என்பதை பற்றிய உறுதியான தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

20. கிரையம் முடிந்த பின் கட்டடத்தில் உள்ள மின் சாதனங்கள், விளக்குகள், மோட்டார் சாதனங்கள் போன்றவைகள் அப்புறப் படுத்தப்பட்டிருக்கலாம் பத்திரத்தில் அதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டிருகின்றதா என சரிப்பார்க்க வேண்டும்.

21.மின் இணைப்புக்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை அறிந்த்துக் கொள்ளவேண்டும் மற்றும் அதனை பற்றிய தகவல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

22. கட்டடமாக இருப்பின் சரியான காலத்தில் வீட்டு வரி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வரி போன்றவை சரியான காலத்தில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டியது.

01 அங்கீகாரம் பெற்ற வரைப்படம் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் குடியிருப்பு கட்டும் இடத்தில் பொதுவான பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள்.

02. கட்டிடம் அங்கீகாரம் பெற்ற வரைப்படத்தின் படி தான் கட்டப்பட்டுள்ளதா என அறிந்துக்கொள்ளுங்கள் .

03. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு, பிரிக்கப்படாத மனை பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்ய உரிமை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்

04. மனையின் உரிமையாளர் மற்றும் உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவர் , பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதியையும் அடுக்கு குடியிருப்பு வாங்குவோர்களுக்கு மாற்றம் செய்துள்ளாரா என்பதினை சோதித்து உறுதிச் செய்யவேண்டும்.

05. முழுமையான கட்டுமான பனி முடிந்த பின்னர்,சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால், அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது கட்டிடம் வரிப்படத்தின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதற்கான பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

06. அடுக்கு மாடி வீடு வாங்குவதில் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் சி.எம்.டி ஏ., வின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு மையத்தினை தொடர்புக் கொள்ளவும்.

மேலும் எந்த விதமான சட்டச் சிக்கலுக்கும் விரிவான விளக்கமளிக்க பல இணையத்தளம் உள்ளன . கீழ் காணும் இணைப்பில் சென்று நமக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெறமுடியும்.


தமிழ்நாடு சட்ட ஆலோசகர்கள்


இதில் உங்களின் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் சட்டரீதியான பதில்கள் இலவசமாக அளிக்கின்றனர் . மேலும் அனைத்து சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டவல்லுநர்கள் மூலம் சட்டஆலோசனைகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குகின்றது.

நாம் வாங்கும் சொத்தினை எந்த விதமான வில்லங்கமும் இல்லமால் அடைய மேற்சொன்ன வழிகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...