வெள்ளி, ஜூன் 28, 2013

இன்று ஒரு தகவல்



1. மூலிகையின் பெயர் :- முருங்கை.

2. தாவரப்பெயர் :- MORINGA OLEIFERA.

3. தாவரக்குடும்பம் :- MORINGACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, ஈர்க்கு, பூ, பிசின், பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இதை பிரம்மவிரிட்சம் என்பர். இதன் மரக்கட்டை மென்மையாக இருக்கும். இதன் பயன் கருதி வேலி ஓரங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. இதன் மென்மையான ஈர்க்குகளில் கூட்டிலைகளையும் வெண்ணிற மலர்களையும் தக்கையான நீண்ட காய்களையும் சிறகுள்ள விதைகளையும் கொண்ட மரம். இந்த முருங்கையை ரோமானியர்களும், கிரேக்கர்களும், எகிப்தியர்களும் பயன் படுத்தியுள்ளார்கள். இதன் ஆரம்பம் இமையமலை அடிவாரம் பின் பாக்கீஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானீஸ்தான் ஆகும். பிலிப்பையின்ஸ்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லண்ட், தாய்வானிலும் பயிராகிறது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் இதைவருடா வருடம் 3 அடி விட்டு கிழைகளை வெட்டி விடுவார்கள். இலை, பூ, காய் ஆகியவை சமையலுக்குப் பயன்படுவதால் தமிழகமெங்கும் காணப்படும். தற்போது 3 அடி நீளமான காய்கள் விடும் மரம் கூட உற்பத்தி செய்துள்ளார்கள். மலைகளிலும் காடுகளிலும் வளரும் முருங்கை கசப்பாக இருப்பதால் சமையலுக்கு உதவாது. தண்ணீர் அதிகம் தேவையில்லை, வெப்பத்தைத் தாங்கக் கூடியது. அதிக குளிரில் வளராது. தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பலன் தரக்கூடிய மரவகைகளை வணிக ரீதியாகப்பயிர் செய்து லாபம் அடைகின்றனர். முற்றிய கொம்புகளை 3 அடி உயரத்தில் வெட்டி நட்டு அதன் நுனியில் பச்சைச் சாணம் வைத்து உயிர் பிழைக்கச் செய்வர். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- இலைச்சாறு அதிக அளவில் வாந்தியுண்டாக்கும். சில வேலைகளில் மல மிளக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள இலை. குருதியை தூய்மையாக்கும். ஈர்க்கு சிறுநீர் பெருக்கும். பூ காமம் பெருக்கும். பிஞ்சு தாது எரிச்சல் போக்கும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிக் காமம் பெருக்கும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். மூக்கில் நீரைப்பெருக்கித் தும்மல் உண்டாக்கும். காமம் பெருக்கும். பட்டை கோழை, காச்சல் நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். வியர்வையைப் பெருக்கும்.குடல் வாயு அகற்றும், பட்ட இடத்தில் அரிப்பு உண்டாக்கிக் கொப்பளிக்கச் செய்து புண்ணுண்டாக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்.

முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும். தாதுபுஷ்டி லேகியம் தேவையில்லை.

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்.

முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.

இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...