புதன், மார்ச் 28, 2012

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற காரணமான கட்டிடம்



தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழிலகத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலாற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலபரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்மனை கட்டப்பட்டதில் நடந்த ஊழல், அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரிசா முதல் தமிழகம் வரை தென்பகுதியை 17ம் நூற்றாண்டின் போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் முகமது அலிகான் வாலாஜா நவாப். இவர், பிரம்மாண்டமான அழகிய அரண்மனை ஒன்றை கட்ட விரும்பினார். அப்போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெரும்பகுதியை கட்டியவர் பால் பென்பீல்ட். அந்த காலத்தில் இவர் கட்டும் கட்டிடம், மிகவும் தரமானதாக கருதப்பட்டு வந்ததே இதற்கு காரணம். அரண்மனையை கட்ட செலவாகும் தொகையை, கட்டி முடித்த பிறகு வாலாஜா நவாப் கொடுத்தால் போதும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரண்மனை கட்டிடப் பணிகள் 1760ல் தொடங்கப்பட்டு 1768ல் முடிக்கப்பட்டது.

சுமார் 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில், சென்னை பல்கலைக்கழகம், செனட் பில்டிங், சென்னை மாநிலக் கல்லூரி, எழிலகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் ஆகியவை அடங்கும். அரண்மனையின் அன்றைய சமையல் கூடமாக இருந்ததுதான், இன்றைய திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்.

அரண்மனையை கட்டி முடிக்க செலாவான தொகையைக் காட்டிலும், பல மடங்கு அதிக தொகையை வாலாஜா நவாப்பிடம் பால் பென்பீல்ட் தெரிவித்தார். அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போன வாலாஜா நவாப், இவ்வளவு தொகையை தன்னால் கட்ட இயலாது என்று அவரிடம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் தீட்டிய திட்டத்தின்படி, வாலாஜா நவாபிடம் இருந்த நிலப்பரப்பை அபகரிக்க, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அரண்மனைக்கு செலவான தொகைக்கு ஈடாக, வாலாஜா நவாபின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், பால் பென்பீல்ட் ஊழல் செய்து விட்டதாக, அவர் மீது ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, 225 மில்லியன் டாலர் தொகைக்கு கட்டப்பட்ட அரண்மனை கட்டிடங்களை 400 மில்லியன் டாலர் என்று கூறியதாக, பால் பென்பீல்ட் மீது குற்றச்சாட்டை வைத்து, ஒரு நாடகத்தை ஆங்கிலேயர்கள் அரங்கேற்றினர். இதன் பிறகு வாலாஜா நவாப் உயிர் வாழும் வரை அந்த அரண்மனையை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஆங்கிலேயர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர், அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டதுதான் அமீர் மஹால்.

அரண்மனை கட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரால் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஊழலின் தொடக்கம் தான், இந்தியாவில் ஆங்கிலேயரின் சாம்ராஜ்ஜியம் காலூன்ற காரணமாகி விட்டது. இதற்கு துணைபோன ஊழல் பேர்வழி பால் பென்பீல்ட், தனது இறுதிக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து வாழ்ந்து செத்துப் போனார் என்பது வரலாறு.
By: Nagoorkani Kader Mohideen Basha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...