ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

கவலையை விடுங்கள்..! சர்க்கரை நோயின்றி இருங்கள்....!!


கவலையை விடுங்கள்..! சர்க்கரை நோயின்றி இருங்கள்....!!


மனிதர்கள் கவலையை மறந்து, மன அழுத்தமின்றி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். கவலைப்படுவதால் என்னங்க தீரப்போகிறது...?


மாறாக, கவலைக்கும், சர்க்கரை நோய்க்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.


கவலைப்படுவதால் சர்க்கரை நோய் (Diabetes) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுவீடன் நாட்டு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


அதிக எதிர்பார்ப்பு, கவலைப்படுதல், இரவு நேரங்களில் தூக்கமில்லாமை போன்றவை சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளை இரட்டிப்பாக்குவதாக அது தெரிவிக்கிறது.


அதிக கவலை, தூக்கமின்மையால் மனோரீதியிலும் பாதிப்புக்குள்ளாவதாக தெரிய வந்துள்ளது.


1938 முதல் 1957ம் ஆண்டு வரை பிறந்த சுமார் 2 ஆயிரத்து 127 ஆண்களிடமும், சுமார் 3 ஆயிரத்து 100 பெண்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில் கவலை கொள்வதால், சர்க்கரை நோய் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.


கவலை தவிர வயது, உடலின் எடைக்கும், வயதுக்கும் இடையேயான விகிதம், சர்க்கரை நோயாளிகள் உள்ள குடும்ப பின்னணி, புகைபிடித்தல், உடல்ரீதியான பயிற்சி, சமூக-பொருளாதாரப் பின்னணி போன்றவையும் சர்க்கரை நோய்க்கான காரணிகளாக அமைகிறது.


மனதளவிலான கவலையானது மூளையின் ஹார்மோன்களை முறைப்படுத்தி, அதுவே மனிதனின் உணவுப் பழக்கத்தை மாற்றக்கூடியதாக விளங்குகிறது. அதே நேரத்தில் உடல்ரீதியான எதிர்மறையான விளைவுகளையும் உருவாக்குவதாக பிபிசி செய்தியை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே மன அழுத்தமும், கவலையும் இதய நோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆய்வைப் பொறுத்த வரை ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், கவலை கொள்வதில் இருதரப்பினரும் வெவ்வேறான தன்மையைக் கொண்டிருப்பதால், பெண்களைக் காட்டிலும், ஆண்களுக்கு சர்க்கரை நோய் வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


பெண்கள் தங்கள் கவலைகளையும், மன அழுத்தங்களையும் வெளியே சொல்லி விடுவார்கள். அதே நேரத்தில் ஆண்கள் வெளியே சொல்வதற்கு பதில் குடி, போதை மருந்து பயன்படுத்துதல் போன்ற தனிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பாதிப்பு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.


ஆண்களுக்கே சர்க்கரை நோய் வாய்ப்புகள் அதிகம் இருப்பதற்கு காரணம் ஹார்மோன் மற்றும் நடத்தை தொடர்பான செயல்பாடுகளே என்றும் ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


எனவே


கவலையை விடுங்கள்....!!! உற்சாகமாக இருங்கள்.....!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...