புதன், பிப்ரவரி 22, 2012

இருளில் மிதக்கும் தமிழகம். விரைவில் மூழ்கும் அபாயம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அறன்டுப் போன முதல்வர் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின் வெட்டை மூன்று மணி நேரமாக அதிகப்படுத்தவும் சென்னைக்கு வெளி மாநிலங்களில் 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 6 மணி நேரமாக குறைக்கவும் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு நேரமாக இருந்த மின்வெட்டை இன்னும் ஒரு நாள் அதிகப்படுத்தி மற்ற தினங்களில் மின்வெட்டு இல்லாமல் சப்ளை செய்வதற்கும் மின்வாரியத் தலைவர் ராஜீவ் ரஞ்சனுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆட்டைப் பிடித்து குட்டியில் விட்டும், குட்டியைப் பிடித்து ஆட்டில் விட்டும் கணக்கை ஒப்புவித்து தப்பிக்க நினைத்த கதையாகத்தான் இது அமையுமேத் தவிற தமிழகம் முழுமைக்கும் தடையின்றி மின்சாரம் கிடைக்க எந்த முயற்சியையும் அரசு மேற்கொண்டதாக அமையாது.

நாற்காலி ஜாக்ரதை !!
எப்படியாவது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடுவார்கள் அதிலிருந்து மின்சாரத்தை கொடுத்து மக்களை சரிக் கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான வேறு முயற்சியில் அரசு இறங்காமல் இருப்பதாகவேக் கருதுகிறோம்.

இந்த எண்ணத்தில் இருந்தால் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு முன் மொத்த தமிழகமும் இடுகாடு போன்று காட்சி அளிப்பதுடன் அம்மா(?) அமர்ந்திருக்கும் நாற்காலியும் தாமாகக் கவிழும் அபாயமும் கூடவே ஏற்படும் என்பதை அம்மா(?) விளங்கிக் கொள்ள வேண்டும்.

காரணம் கடந்த 10-2-2012 அன்று மட்டும் கோவையில் 40 ஆயிரம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் சகிதம் சுமார் மூன்று லட்சம் பேர் கோவை காந்திபுரம் அருகே கூடி மின்வெட்டைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம் அரசை ஆட்டம் காண வைக்கும் ஆர்ப்பாட்டமாக அமைந்திருந்ததையும் அம்மா(?) விளங்கிக் கொள்ள வேண்டும்.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோவையில் மட்டும் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை சுமார் பத்தாயிரம் சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் பெரிய தொழிற்சாலைகளில் மின்சாரம் வரும்போது மட்டும் வேலை நடக்கும் நேரத்திற்கு மணிக் கணக்கில் ஊதியம் என்றும் மாத சம்பளம், நாள் சம்பளம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் லட்சக் கணக்கான தொழிலாளிகளின் வயிற்றுப் பிழைப்புக்கு அல்லல் படும் அவல நிலை உருவாகி விட்டது என்றும் மாவட்ட தொழில் சங்க(கொடிசியா) தலைவர் கந்தசாமி கூறுகிறார்.

கோடிக் கணக்கில் இழப்பு
கோவைக்கு அடுத்ததாக அதிக அளவில் தொழிற்சாலைகள் கிருணகிரி மவட்டத்தின் ஓசூரில் இயங்கி வருகிறது. தொடர் மின்வெட்டால் ஒசூரில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கிறது என்று ஓசூர் தொழிற்சங்கத்தலைவர் மாரியப்பன் கூறுகிறார்.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, கரூர் போன்ற நகரங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குவதாகவும் மேல்படி விறைத்தறிகளிலிருந்து நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மீட்டர் துணி உற்பத்தியாவதாகவும், இந்நகரங்களிலிருந்தே அதிகமாக வெளிநாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இது தற்போது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டினால் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆர்டர்கள் சப்ளை செய்ய முடியாமலும் வெளிநாட்டுக் கம்பெனிகளில் பெறப்பட்ட முன் தொகைகளை திரும்பக் கொடுக்க முடியாமலும் விசைத்தறி முதலாளிகள் தவிப்பதாகவும் தமிழ்நாடு விசைத்தறி ஏற்றுமதியாளர் ஜவுளி உற்பத்தி சேவா சம்மேளன தலைவர் அப்புசெட்டியார் கூறுகிறார்.

திருப்பூரில் ஏராளமான சாயப் பட்டறைகள் ஏற்கனவே மின் பற்றாக்குறையால் இழுத்து மூடி விட்டதால் ஐயாயிரத்துக்கும் அதிகமான பனியன் ஆலைகள் மூடப்பட்டு விட்டதாகவும் அதனால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 75 சதவிகிதம் பனியன் உற்பத்தி குறைந்து விட்டதாகக் கூறி திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழுவினர் இன்று (22-2-2012) 12 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தை திருப்பூரில் நடத்தி உள்ளனர்

மீனவர்களுக்கும் பாதிப்பு
மீனவர்கள் கடலுக்கு செல்லும் பொழுது ஐஸ்பார்களை எடுத்துச் செல்வார்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து அவற்றை ஐஸ்பார்கள் உள்ள பெட்டிகளில் வைத்துக்கொண்டு வந்து சேர்ப்பார்கள் தொடர் மின்வெட்டினால் ஐஸ்பார்கள் கிடைக்காததால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவடங்களிருந்து ஏராளமான மீனவர்கள் மீன்டிக்கச் செல்வது குறைந்து வருவதால் கடுமையான வறுமைக்கு மீனவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்று இந்திய மீனவப் பேரவை துணைச் செயலர் ராஜேந்திரன் கூறுகிறார்.


தமிழகமே இருளில் மூழ்கினாலும் முதலமைச்சர் வீட்டிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுவரை மின்சாரம் தடையின்றி வருவதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கும் அந்தப் பகுதிக்கு மட்டும் 24 மணி நேர மின்சப்ளை இருப்பதாகக் கூறி சேலம் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதுவல்லாமல் குழந்தைகள் ஹோம் ஒர்க் செய்ய முடியாமல் அல்லல் படுகின்றனர், அறிவிக்கப்படாத மின் வெட்டினால் அறிவிக்காமல் வந்து கடிக்கும் கொசு தொல்லையினால் அறிமுகமில்லாத ஜூரம் பல பெயர்களில் வந்து பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் குறி வைக்கிறது இதனால் குழந்தைகள் நல மருத்துவர்கள் வீட்டில் பண மழைப் பொழிகிறது.


சொன்னது என்னாச்சு ?

இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும், மின்சாரவாரியம் திருத்தி அமைக்கப்படும், மின் திருட்டு தடுக்கப்பட்டு மின் விநியோகம் சீராக்கப்படும்.


மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.


2012ஆம் ஆண்டுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக்கொண்டு 1000 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்றப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.


காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும் அணுசக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 2000 கிலோ வாட் உயிரிதிரள் (Bio mass) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.


வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.


கிராமப்புற தெரு விளக்குகளுக்கும் சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.


மின்சார திருட்டை ஒழிக்க ஒரு படை அமைத்து வினியோக முறையில் மாற்றம் செய்து 3 பேஸ் கரண்ட் தடையில்லாமல் வழங்கப்ப்டும்'


மேற்கண்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி 1,20,000- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.


ஒருங்கிணைந்த தன்னிறைவு கொண்ட தொடர்ச்சியான நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வழிவகை செய்யப்படும். அதற்கான தொடர் ஊக்க முயற்சிகளுக்கு பெரிதும் உதவுகிற வகையில் பல புதிய திட்டங்கள் தீட்டப்படும்.


என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு ? சொன்னதெல்லாம் சரி தான் செயல் படுத்தத் தான் நேரமில்லை ! செயல் படுத்த நேரமில்லாத அளவுக்கு அம்மா(?)வைப் பின் தொடரும் பழிவாங்கும் படலங்கள்.

ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து தி.மு.கவினரை பழிவாங்குவது எப்படி என்று திட்டம் தீட்டி செய்படுவதற்கு ஆறு மாதமாகி விட்டது இன்னும் முடியலவில்லை ஐந்து வருடம் வரை முடியாது. அதற்கடுத்து சசிகலா குடும்பம் மாட்டிக் கொண்டதால் அவர்களைப் பழிவாங்குவது எப்படி என்பதில் அதற்கு ஒரு ஆறு மாதம் பிடித்து விடும் ஐந்து வருடம் வரை கூட நீடிக்கலாம். இது முடிவதற்குள் விஜயகாந்த் எதிர்த்து விட்டதால் அதுவும் சட்டமன்றத்திலேயே கையை நீட்டி ஆக்ரோஷமாகப் பேசி விட்டதால் அவரை எப்படிப் பழிவாங்குவது என்பதில் அதற்கு ஆறு மாதம் பிடிக்கலாம். இதெல்லாம் ஒருப் புறமிருக்க சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்காக 32 அசைசர்கள் புடைசூழ பணத்தை மூட்டைக் கட்டி படை நடத்தி அனுப்பி உள்ளார் அங்கே அதிமுக தோல்வி அடைந்துவிட்டால் அந்த 32 அமைச்சர்களையும் யாரை எந்த தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது என்பதற்கு அடுத்த திட்டம் தீட்டி செயல்பட அதற்கு ஒரு ஆறு மாதம் பிடிக்கலாம். அதனால் அம்மா(?)வுக்கு மின்சாரம் விஷயமாக சொன்னதை செய்ய நேரமில்லை.

தமிழ்நாட்டில் எந்த நலத்திட்டம் உருப்படியாக நடந்ததோ இல்லையோ ? மிக மிக ஜரூராக பழிவாங்கும் திட்டம் நடந்திருக்கிறது போலீஸ் காரர்களுக்கும் அம்மா(?)வின் பழி வாங்கும் உத்தரவை செய்து முடிக்கவே நேரம் போதவில்லை என்பதால் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் மீது நடந்தேறும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற சமூக விரோத செயல்களை ஒடுக்க நேரம் போத வில்லை.

ஜெயில் அதிகாரி ஒருவரை கே.என்.நேரு மிரட்டினார் என்பதற்காக அவரைப் பிடிக்க 6 தனிப் படை நியமிக்கப்பட்டுள்ளதாம் (?). கே.என்.நேரு அவர்களே இந்தப்படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? தமிழகத்தின் மொத்த போலீசும், ராணுவமும் இதற்காகத் தான் காத்திருக்கிறது என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டு உடனடியாக சரணடையுமாறு கோட்டு கொள்கிறோம.

பழிவாங்கும் படலத்தை தற்காலிகமாக மின்சாரம் கிடைக்கும் வரையாவது நிருத்தி வைத்து விட்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்பிரகாரம் தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்து தொழிற் சாலைகளை இயங்கவிட்டு தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும், குழந்தைகளை கொசு தொல்லையிலிருந்து காப்பாற்ற நடிவடிக்கை எடுக்குமாறும் ஆஹா இதுவல்லவோ அட்மினிஸ்ட்ரேசன் என்று வாயாறப் புகழ்ந்து தள்ளிய மத தீவிரவாதி சோ ராமசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...