புதன், ஜனவரி 16, 2013

திருமணமான பெண் ஒருத்தி


திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். “இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.

இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார். காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார்.

“மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா?” என்று கேட்டார் தாயார். அதற்கு “அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி” என்று கூறினாள் மகள். “சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு?” என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, “ரொம்ப மென்மையாக இருக்கு” என்று கூறினாள் மகள்.

“முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல்” என்று கூறினார் தாயார். “கொஞ்சம் கடினமாக இருக்கிறது” என்று சொன்னாள் மகள்.

அடுத்தபடியாக “காப்பியை எடுத்து குடி” என்றார் தாயார். காபியை குடித்துவிட்டு, “ரொம்ப சுவையாக இருக்கிறது” என்று கூறினாள் மகள்.

“எதற்கு இந்த வேடிக்கை?” என்று தாயிடம் வினவினாள் மகள். அதற்கு பதில் அளித்த தாய், “மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில் தான் கொதிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது.

“இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது”.

“இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது”.

“காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது”.

“மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரி தான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.” என்று கூறினார் தாய்.

உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது.

தினந்தந்தி பேப்பரை எடுத்து படித்தேன். அதில் இந்த குட்டி கதை இருந்தது. தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் நினைவு மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது இந்த கதையை சொன்னார் என்று இருந்தது.

எங்களுக்கு புரிந்தது ஆனால் அம்மாவின் தொண்டர்கள் இனி கஷ்டங்கள் வந்தால் 3 பாத்திரங்களை எடுத்து வருவார்கள் இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியுமா ??? ( வடிவேலுவின் நண்பர்கள் ஜாமீன் தேடி கடலுக்கு போனது போல)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...